பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார். அவருக்கு வயது 87.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்த அவர், பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும் இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைப்பர்.
‘புராப் அவுர் பஸ்ஜிம்’, ‘கிரான்டி’, ‘ரொட்டி’, ‘காபாடா அவுர் மாகான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
பத்மஸ்ரீ விருதையும் தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது.
பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.