காலஞ்சென்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.
எனினும், இந்த நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பலர் வரவேயில்லை.
சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்கள் மட்டுமல்ல, தமன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களையும் நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை. ஜி.வி. பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா ஆகிய சிலர் வந்திருந்தது ஆறுதலாக அமைந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் முத்துக்குமாரின் மனைவியிடம் புது வீட்டுக்கான சாவியை ஒப்படைத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
அந்த வீட்டின் விலை ரூ.2.50 கோடியாம். பொதுவாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முன்வைக்கப்படும் வாக்குறுதிகளை சம்பந்தப்பட்டவர்கள் மறந்து போவார்கள். அவ்வாறு இல்லாமல், இந்த வீடு வழங்கும் திட்டம் நல்லபடியாக நிறைவேற்றப்பட்டது.
அது மட்டுமல்ல, அந்த வீட்டை இந்த நிகழ்ச்சிக்கு முன்பே முத்துக்குமாரின் மனைவியின் பெயரில் பத்திரப்பதிவும் செய்துவிட்டனர்.
இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

