தமிழ்த் திரையுலகில் ‘மக்கள் செல்வன்’ என அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, உச்ச நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ் ஆகியோர் அப்படத்தில் நடித்துள்ளனர்.
அப்பட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “திரைத்துறை மிகவும் அற்புதமான தொழில். ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ போன்ற இளம் தயாரிப்பாளர்கள் அத்துறைக்கு வந்ததை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் பயப்பட வேண்டாம். இது அறிவுரையன்று. எனது அனுபவம்,” என்றார்.
“ஓர் இயக்குநர் எப்படி வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வர்த்தகம், கதை கேட்கும் முறை ஆகியவற்றை கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்,” எனத் தமது அனுபவததை அவர் பகிர்ந்தார்.
படத்தின் நாயகனான ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசியபோது, “அவர் எப்போதும் பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் எனத் தோன்றுகிறது. எந்தக் காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு இருக்கிறார், அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது நமக்கெல்லாம் தெரியும், ஆனால் ஒரு நடிகராகவும் அவர் தன்னைத் தொடர்ந்து செதுக்கிக்கொண்டே இருக்கிறார்,” என் அவர் கூறினார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்பியுள்ள நடிகர் அப்பாசை மேடையில் பார்த்த விஜய் சேதுபதி, அவரை அன்புடன் வரவேற்றார்.
“அப்பாசை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. அவர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்குக் கூடுதல் பலம்,” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
7 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கூட்டணி
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே, இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு அவர்கள் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.
அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ‘மெட்ராஸ் டாக்கீஸ்’, ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ ஆகியவை இணைந்து தயாரிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

