சூரி நாயகனாக அசத்தும் ‘மண்டாடி’ திரைப்படம்

சூரி நாயகனாக அசத்தும் ‘மண்டாடி’ திரைப்படம்

2 mins read
5eb0d052-d024-4229-96c6-82f141f77966
முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார் என்கிறது இந்த விமர்சனம். - படம்: திரைப்படச் சுவரொட்டி

நகைச்சுவை நடிகராக வலம்வந்து, ‘விடுதலை’, ‘கருடன்’ படங்கள் மூலம் கதாநாயகனாகத் தடம் பதித்த நடிகர் சூரி, மீண்டும் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. 

மதிமாறன் புகழேந்தியின் திரைக்கதையிலும்  இயக்கத்திலும் உருவாகியுள்ள படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி. வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நாகப்பட்டினம் பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரியப் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடலையே நம்பி வாழும் மீனவச் சமூகத்தின் பின்னணியில் கதை நகர்கிறது. கடலில் நடக்கும் பாரம்பரியப் படகுப் போட்டி (மண்டாடி), அதில் ஏற்படும் போட்டி, பகைமை, குற்ற உணர்ச்சியில் இருந்து ஒரு மனிதன் எவ்வாறு  மீண்டு வருகிறான் என்பதைச் சண்டைக்காட்சியின் வழி உணர்வுபூர்வமான பின்னணியில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன்.

முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டுமல்லாது, உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சூரியின் நடிப்பு வியக்க வைக்கிறது.

நடிகர் சத்யராஜ், கதையின் முக்கியத் தூணாக நின்று கம்பீரமான குரலாலும், அனுபவ நடிப்பாலும் படத்தின் கனத்தைக் கூட்டுகிறார்.

வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுஹாஸ் மிரட்ட, கதையோட்டத்திற்குத் தேவையான நேர்த்தியான நடிப்பை மஹிமா வழங்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஜி. வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை. கடல் அலையின் வேகத்திற்கு ஏற்பp பின்னணி இசை துடிப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. கடலின் பிரம்மாண்டத்தையும், ஆபத்தான படகுப் போட்டிக் காட்சிகளையும் உண்மைத்தன்மையுடன் படம்பிடித்துள்ள ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்