யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.
கிஷோர், விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை, “மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முற்றிலும் புதிய களத்தில் கதை உருவாகியுள்ளது. திறமைமிக்க நடிகர்களின் உழைப்பிலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் நேர்த்தியிலும் படம் தயாராகியுள்ளது,” என்றார்.
மேலும், “மற்ற பறவைகளைவிடக் காகங்கள் தனித்துவமான குணங்களைக் கொண்டவை. அந்தப் பண்பே படத்தின் மையப்புள்ளி,” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்துவருகின்றன. அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

