பெண்களுக்கு நீக்குப்போக்கான வேலை நேரங்கள் இருப்பது அவசியம் எனத் தாம் கருதுவதாக கூறுகிறார் நடிகை வித்யா பாலன்.
தாம் ஒரு தாய் அல்ல என்பதால் தொடர்ந்து 12 மணி நேரம்கூட பணியாற்ற முடியும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தீப் வங்காவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ படத்தில் ஒப்பந்தமானார் இந்தி நடிகை தீபிகா படுகோன். எனினும், நாள்தோறும் எட்டு மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால் அப்படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். இது இந்தித் திரையுலகில் பேசுபொருளானது.
இந்நிலையில், வித்யா பாலனிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டபோது, தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள், நீக்குப்போக்கான நேரங்களில் வேலை செய்வது தொடர்பான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவை நியாயமானவை என நான் நினைக்கிறேன். குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தொடக்க காலத்தில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்கள் வேலையில் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு துறையும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.
“நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. என்னால் 12 மணிநேரம் தொடர்ந்து பணிபுரிய முடியும். ஏனெனில், நான் ஒரு தாய் அல்ல,” என தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.
இக்கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றாலும் மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. திரையுலகம் மற்ற துறைகளைப்போல் செயல்படவில்லை என சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.