‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
அண்மையில் இவரது நடிப்பில் ‘மாமன்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கட்டா குஸ்தி-2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் சமூக ஊடகங்களிலிருந்து சற்று விலகி இருக்கப்போவதாக ஐஸ்வர்யா லட்சுமி அறிவித்துள்ளார்.
தமது பதிவில், “என்னை இந்தத் திரைத் துறையில் தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்று கருதினேன். அதனால், நீண்ட காலமாக அதைப் பயன்படுத்தி வந்தேன். ஆனால், சமூக ஊடகங்கள் என்னைத் தலைகீழாக மாற்றி இருக்கின்றன,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “நான் இருக்கும் துறையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். இருப்பினும், எனது பணிகளிலிருந்து என்னை அது திசைதிருப்புவதை நன்கு உணர்ந்தேன். என்னுள் இருந்த சிந்தனையைச் சமூக ஊடகம் பறித்துவிட்டது. எனது மொழி புலமையை அது பாதித்துள்ளது,” என்றார் அவர்.
“தனிப்பட்ட மற்றும் திரையுலக வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் சிறிய இன்பத்தைக் கூட அது மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடுகிறது. மற்றவர்களைப் போன்று இணையத்தில் பகிரப்படும் கருத்துகளுக்காகவும் விருப்பங்களுக்கு ஏற்றவாறும் வாழ எனக்கு விருப்பமில்லை,” என அவர் கூறியுள்ளார்.
“எனது திரையுலகப் பயணத்தில் எனக்கு ஏற்றதையும் சரியானதையும் செய்ய விரும்புகிறேன். அதனால், சமூக ஊடகத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன். இந்த நெடிய பயணத்தில் அர்த்தமுள்ள உறவுகளையும் திரைப்படங்களையும் உருவாக்குவேன் என நான் நம்புகிறேன். நான் வெற்றிபெற உங்கள் அன்பைக் கொடுங்கள்,” என உருக்கமாக ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட்டிருந்தார்.