நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகக் கலைஞராகத் திரையுலகில் அசத்தி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.
செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’, மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘இம்மார்டல்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கும் அவர், சூர்யா 46, தனுஷ் 54, ‘பராசக்தி’, ‘மண்டாடி’, துல்கர் சல்மானின் தெலுங்குப் படம் ஆகியவற்றிற்கு இசை அமைத்து வருகிறார்.
கோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சில படங்கள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, இவ்வாண்டு தமக்கு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், தொடர்ந்து தன்னைத் தேடி நல்ல கதைகளாக வருவதில் மகிழ்ச்சி என்றார்.
“வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதுவொரு குடும்பப்பாங்கான படம். ‘அலா வைகுண்டபுரமுலோ’ படத்தைப் போன்று இப்படமும் இருக்கும்,” என ஜி.வி. கூறினார்.
மேலும், “நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து படம் ஒன்றில் நடித்திருக்கிறோம். அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தரவேண்டும். இசை வேலைகளுக்குச் சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் பேசினார்.

