‘தி ராஜாசாப்’ தெலுங்குப் படத்தில் தாம் பேய் வேடத்தில் நடிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளார் நிதி அகர்வால்.
‘பாகுபலி’ பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம்தான் ‘தி ராஜாசாப்’. திகிலுடன் கூடிய நகைச்சுவைப் படமாக உருவாகிறது. மாருதி இயக்குகிறார்.
முன்னணி நாயகர்கள் பலர் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜாசாப்’ படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இது திகிலும் நகைச்சுவையும் நிறைந்த படம் என்பதை நிதி அகர்வால் அண்மைய பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
“திகில் கதை என்றதும் இப்படத்தில் நான் பேயாக நடிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். அது தவறான தகவல் என்பதை தொடக்கத்திலேயே கூறிவிடுகிறேன்.
“அதேசமயம், எனது கதாபாத்திரத்தைப் பார்த்து ரசிகர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள்,” என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.