நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘அமரன்’. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வழங்கியுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக அளவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படக்குழு தீவிரமாக இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்புதான் மலேசியாவில் ‘அமரன்’ படத்திற்கான விளம்பரப் பணிகள் நடந்து முடிந்தன.
அப்போது ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “அடுத்த தளபதி நீங்கள்தான்” என்று கூட்டத்திலிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டதைக் கேட்டவுடன் “நிச்சயம் அப்படி எல்லாம் வரமுடியாது. தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை ஒரே ஒரு ‘தளபதி’தான், ஒரே ஒரு ‘தல’தான், ஒரே ஒரு உலகநாயகன்தான், ஒரே ஒரு ‘சூப்பர்ஸ்டார்’தான்.
“அவர்களுடைய நடிப்பைப் பார்த்துதான் சினிமாவில் நடிக்கவந்தவன்தான் நான். அவர்களைப் போல் கடினமாக உழைத்து, அவர்களைப் போல் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க ஆசைப்படலாம். ஆனால், அவர்களைப் போலவே ஆக நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு,” என்று நச்சென்று பதிலளித்துள்ளார்.

