தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.
இப்போது அந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
அதில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள், வாய்ப்புகளுடன் வருகிறது.
“எனது பயணத்தில் திரைப்படங்கள் வாயிலாகவும் திரைத் துறை நண்பர்கள், பத்திரிகை, ஊடகத் துறை, சமூக ஊடக நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க நான் முயற்சி செய்து வருகிறேன்.
“எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
“நீண்டகால யோசனை, பலகட்ட பரிசீலனைக்குப் பிறகுதான் ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன்.
“இம்முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னைச் சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் எடுக்கப்பட்டது.
“இந்நேரத்தில் எனது தனியுரிமைக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இம்முடிவு எனது சொந்த முடிவு.
தொடர்புடைய செய்திகள்
“இந்த விஷயம் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
“நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.