இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க்’ படத்தில் நவீன் சந்திராவும் யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் நாயகன் கன்னட நடிகர் கிச்சா சுதீப். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய யோகி பாபு, ஒரு படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதில் உள்ள சிரமங்கள் குறித்து விவரித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர், ‘விளம்பர நிகழ்வுகளுக்கு வருவதில்லை என்று உங்களைப் பற்றி ஒரு பட நிறுவனம் புகார் எழுப்பியுள்ளதே?’ என்று கேள்வி எழுப்ப, ‘அதற்கு முதலில் அந்தப் படக்குழுவை அழைத்து வாருங்கள், உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்’ என்றார்.
“நல்ல தயாரிப்பாளர்கள் அத்தனை பேருக்கும் ஆதரவாகத்தான் நடந்திருக்கிறேன். நேரம் இருந்தால் பட விழாக்களுக்கு வரப்போகிறேன். படத்தில் 4 அல்லது 5 காட்சிகளில்தான் நடிக்கிறேன்.
“நான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. வளர்ச்சி வந்தால் சில பிரச்சினைகள் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது பிரச்சினைகளைச் சந்தித்து வருவதால், வளர்ச்சி அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்’’, என்று பதிலளித்தார்.
‘மார்க்’ படத்தில் பல நல்ல விஷயங்களை முயற்சி செய்திருப்பதாகக் குறிப்பிட்ட யோகி பாபு, இந்தப் படத்தைத் தயாரிக்கும் சத்ய ஜோதி நிறுவனத்திடம் பலமுறை வாய்ப்பு கேட்டிருப்பதாகவும் தற்போது அந்தக் குடும்பத்தில் தானும் ஒருவராக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

