விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘மகாராஜா’ படம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது அந்தப் படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் வெளியாக உள்ளது. மேலும், தற்போது ‘ஏஸ்’, ‘ட்ரெயின்’, படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, ‘பிக்பாஸ் சீசன்-8’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், “எனது மகன், மகளிடத்தில் நான் அப்பா என்று ஒருபோதும் அதிகாரம் செய்வதில்லை. அவர்களிடத்தில் நானும் ஒரு குழந்தை போன்றுதான் என்னை வெளிப்படுத்துகிறேன்.
“அதோடு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்கள் இருவரிடத்திலும் கருத்து கேட்பேன். அவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பேன். முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்களை குடும்பத்தாரிடத்திலும் பகிர்ந்து கொள்வேன்.
“என் மகன், மகளை பெயரைச் சொல்லி நான் அழைப்பதில்லை. என் மகன் சூர்யாவை அப்பா என்றும் மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும் தான் நான் அழைத்து வருகிறேன்,’’ என்று கூறினார் விஜய் சேதுபதி.