மதிப்பளிக்கும் பண்பு இல்லாவிடில் என்னுடன் பழகமுடியாது: ரெஜினா

மதிப்பளிக்கும் பண்பு இல்லாவிடில் என்னுடன் பழகமுடியாது: ரெஜினா

2 mins read
54d6c6bb-bb2e-4b60-90df-1bdd648a9225
நடிகை ரெஜினா கசாண்ட்ரா. - படம்: ஊடகம்

‘மாடலிங்’ துறையில் இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இதுவரை எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத இவர், இப்போது தெரிவித்துள்ள தகவல்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேர்காணல் ஒன்றில் ரெஜினா பேசியபோது, “நான் மிகவும் நேர்மையானவள். என்னால் எதையும் ஒளித்து மறைத்துப் பேச முடியாது. எதையும் நேருக்கு நேர் பட்பட்டென்று கூறிவிடுவேன்,” என்பவர், தனக்கு தற்போதைக்கு காதலர்கள் என யாரும் இல்லை என்கிறார்.

“நடிகர்கள் சந்தீப் கிஷன், சாய் தரம் தேஜை காதலிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால், உண்மையில் அவர்கள் நண்பர்களாகத்தான் என்னுடன் பழகுகிறார்கள்.

“எனினும், முன்னாள் காதலர்களாக சிலர் இருந்துள்ளனர். என்னால் பொய் சொல்லமுடியாது என்பதால் எனது பெற்றோரிடமும் நான் இதைப்பற்றி கூறியுள்ளேன்.

“பொதுவாக ஒருவருடன் நட்பு கொள்ளும்போது அன்பும் மரியாதையும் அதிகம் எதிர்பார்ப்பேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிப்பது முக்கியம். இந்தக் குணம் இல்லாவிட்டால் என்னுடன் பழகமுடியாது,” எனக் கூறியுள்ளார் ரெஜினா.

சென்னைப் பெண்ணான ரெஜினா, தமிழில் ‘கண்டநாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் பரபரப்பாக நடித்து வரும் இவர், தற்போது அஜித்தின் ‘விடா முயற்சி’ படத்திலும் நடித்து வருகிறார்.

‘செக்‌ஷன் 108’, ‘பிளாஸ்பேக்’ படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ‘ஜாட்’ எனும் இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

33 வயதாகும் ரெஜினா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்