மலையாளத் திரையுலகில் ஏற்கெனவே நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் தொடர்பான தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மலையாள நடிகை பத்மபிரியா தமிழ்த் திரையுலகில் தாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களைத் தற்போது பகிர்ந்துள்ளார்.
இவர் தமிழில் ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
“நான் நடித்த தமிழ்ப் படம் ஒன்றின் படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, அதன் இயக்குநர் அனைவரது முன்னிலையிலும் என்னைக் கன்னத்தில் அறைந்தார். ஆனால், ஊடகங்களில் நான்தான் அவரை அறைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.
“நடிகர் சங்கத்தில் நான் அளித்த புகாரை அடுத்து, அந்த இயக்குநர் தொடர்ந்து புதுப்படங்களை இயக்க ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ள பத்மபிரியா, அந்த இயக்குநரின் பெயரைத் தெரிவிக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதி கதாநாயகனாக நடித்த ‘மிருகம்’ படத்தில் பத்மபிரியாதான் நாயகி.
அச்சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து பரபரப்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.