பொதுவாக வெற்றி அடைவதைவிட ஒரு போட்டியில் பங்கேற்பதுதான் முக்கியம் என்கிறார் ஏ.ஆர். ரகுமான்.
பிப்ரவரி 14ஆம் தேதி அன்பர் தினத்தையொட்டி சென்னையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தாம் வாய்ப்பளிக்கத் தயங்கியதில்லை என்று கூறியுள்ளார்.
ஒரு போட்டியில் நன்றாகப் பாடுபவர்களைக்கூட சில சமயம் வெளியேற்றிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், பாடல் போட்டிகளில் யாரெல்லாம் தோற்றுப்போகிறார்கள் என்பதைக் கவனிப்பதுதான் தனது முக்கியமான வேலையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
“வெற்றியாளர்களைவிட பங்கேற்பாளர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர்கூட 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால், அவரது குரலின் தரம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் ரகுமான்.
ரகுமான் இசையில், நரேஷ் ஐயர் பாடிய முதல் பாடல் ‘ரூபாரு ரங் தே பசந்தி’. இதற்காக நரேஷுக்குத் தேசிய விருது கிடைத்தது.

