தன்னை ஒரு கொடுமைக்காரர் என்று மகள் அவந்திகா கூறியதைத் தாங்க முடியவில்லை என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். தமிழில் ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலா, இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார்.
பாடகி அம்ருதாவைக் காதலித்து மணந்த இவர், பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்துள்ள பாலா, எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது மகள் அவந்திகா, தன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும் தன்னைப் பார்க்க முடியாமல் ஏங்குவதாகவும் அண்மையில் ஒரு காணொளியில் குறிப்பிட்டிருந்தார் பாலா.
இதனிடையே, அவந்திகா வெளியிட்ட காணொளியில் தனது தந்தையை நேசிக்க சிறு காரணம்கூட இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“சிறு வயதில் அவர் ஒரு நாள் இரவு மது போதையில் வீடு திரும்பிய பின்னர் எனது தாயை அடித்து உதைத்தது என் நினைவில் உள்ளது. அவர் கூறும் எதிலும் உண்மை இல்லை,” என்று அவந்திகா கூறியுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தன் மகளை மிகவும் நேசிப்பதாகவும் மற்றொரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார் பாலா.
“இனி ஒருபோதும் நான் உன் அருகில் வரமாட்டேன் பாப்பு (அவந்திகா). இது கடவுள் மீது சத்தியம். நீ எப்போதுமே எனக்கு குழந்தைதான்,” என்று பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

