ஐஸ்வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
‘எஸ்ஆர் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் முதன்மைப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
“உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகும் படம் ‘அண்டர் 18’. அக்கா - தம்பி பின்னணியில் நடக்கும் கதை. இப்போதுதான் படம் தொடங்கியுள்ளது. மற்ற விவரங்களை தற்போது சொல்ல இயலாது,” என்றார் ஐஸ்வர்யா.
“என் தம்பியாக கார்த்திகேயன் நடிக்கிறார். சுதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். எனக்கும் அவருக்கும் இடையில் அதிகமான காட்சிகள் உள்ளன. ஓசூர் பகுதியில் நடப்பது போன்ற படம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“படத்தின் கதை நன்றாக இருந்தால் அது மொழி தாண்டி எல்லாப் பகுதியிலும் உள்ள மக்களால் ரசிக்க முடிகிறது. அதனால் எல்லா மொழி பார்வையாளர்களுக்குமான படமாக ‘அண்டர் 18’ தயாரிக்கப்படுகிறது,” என்று ஐஸ்வர்யா தெரிவித்தார்.
“தமிழில் நடித்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நல்ல கதைகளுக்காகக் காத்திருந்தேன். நான் தொடர்ந்து நடித்த ஏழு, எட்டுப் படங்கள், பெண்ணியம் சார்ந்த கதைகளைக் கொண்டது,” என்று ஐஸ்வர்யா கூறினார்.
‘கனா’, ‘காக்கா முட்டை’, ‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பன சுந்தரி’, ‘கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘க/பெ.ரணசிங்கம்’ எனத் தான் நடித்த பல படங்கள் நல்ல படங்கள் என்று குறிப்பிட்ட அவர், “இன்றைக்கும் அந்தக் கதைகளும் அதில் என் கதாபாத்திரங்களும் பேசப்படுகின்றன. அதனால், வாய்ப்பு வழங்கப்படும் படங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று ஐஸ்வர்யா தெரிவித்தார் .
“நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால் எனக்கு அதிகம் நேரம் தேவைப்படுகிறது. சினிமா எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த நினைக்கிறேன். அதனால் நல்ல கதைகளுக்குக் காத்திருக்கிறேன்,” என்றார் ஐஸ்வர்யா.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது தெலுங்கு மொழியில் நான்கு படங்கள் நடிக்கிறேன். முன்னணி நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோருடன் படங்களில் நடிக்கின்றேன். தமிழ் சினிமா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. அதை விட்டுவிட முடியாது, அதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்,” என்று ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம் கூறினார்.

