மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காகத் தம்மை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாகப் பேசுவதே தனது குணம் என்றும் நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழில் ஜெயம் ரவியின் ‘கோமாளி’, ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’, ‘தேர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே.
சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை, பயண அனுபவங்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது புதிய வாழ்க்கைமுறை குறித்து சம்யுக்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
“கடந்த ஆண்டு இறுதியில் நான் மும்பைக்குக் குடிபெயர்ந்தேன். நான் எப்போதும் ஆசைப்பட்ட ஒரு கனவு வாழ்க்கையைத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மும்பை எனக்கான பல புதிய வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது; அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
மேலும் தமது குணம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ள அவர், “நான் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவள். நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் மட்டுமே என் வாழ்வில் எப்போதும் முதலிடம் கொடுப்பேன்,” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சம்யுக்தா ஹெக்டே தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைகள், கடல்சார் விளையாட்டுத் தளங்களில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி, தற்போது ரசிகர்களின் விருப்பங்களைக் (லைக்குகள்) குவித்து வருகின்றன.

