நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன்: சிம்பு

3 mins read
800514d0-9131-45e5-a2b6-cd2807e6cf12
சிம்பு. - படம்: ஊடகம்
multi-img1 of 3

நான் நல்லவனாக இருக்கவோ கெட்டவனாக இருக்கவோ ஆசைப்படவில்லை. நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று நடிகர் சிம்பு கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ திரைப்படம், ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ‘டிரைலர்’ வெளியாகி, இணையத்தில் பரவி வருகிறது.

‘டிரைலர்’ வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, “தக்ஃலைப்’ படத்தின் ‘டிரைலர்’ தெறிக்கப் போகுது. அதனைப் பார்த்தாலே உங்களுக்கு எனது பாத்திரம் குறித்து எளிமையாகப் புரிந்துவிடும். நான் நாயகனா? வில்லனா? என்பதை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

‘மன்மதன் 2’, ‘வல்லவன் 2’ ஆகிய இரண்டு படங்களில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற பொருத்தமான படமாக ‘மன்மதன் 2’ இருக்கும்.

விராட் கோஹ்லி அல்லது கமல்ஹாசன் இருவரது வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுத்தால், யாருடைய படத்தில் நீங்கள் நடிக்க ஆசைப்படுவீர்கள்? என்ற கேள்விக்கு, “இருவரது படங்களிலும் நடிக்க எனக்கு ஆசை உள்ளது.

“அண்மையில், விராட் கோஹ்லி ‘நீ சிங்கம்தான்’ என்ற எனது பாடலைப் பார்த்து ரசித்ததாகக் கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது,” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “புதிதாகத் திரையுலகில் இயக்குநராக வருபவர்களுக்கு நான் மூன்று படங்கள் குறித்து பரிந்துரைப்பேன். அவை: ஒரு தலை ராகம், நாயகன், இந்தியன்,” என்றார் சிம்பு.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்களை மீண்டும் ஒருமுறை புதிய படமாக எடுக்க முடியாது என்றும், தனது நடிப்பில் வெளிவரும் ‘தக்ஃலைப்’ ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்றும் சிம்பு கூறியுள்ளார்.

டிரெய்லரின் ஆரம்பத்தில் சிம்புவை சிறு வயதிலிருந்து வளர்க்கும் கமல்ஹாசன், தனக்குப் பிறகு சிம்புதான் தனது ராஜ்ஜியத்தை ஆட்சி செய்பவர் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறார்.

ஆனால், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருவரும் ‘நீ வெற்றிபெறுவாயா? நான் வெற்றிபெறுவேனா?’ என மோதும் நிலை உருவாகிறது.

இந்த மோதலில் வெற்றி பெற்றது யார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று தெரிகிறது.

கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவரும் பொறி பறக்கும் விதத்தில் ஆக்ரோஷத்துடன் நடித்துள்ளனர்.

அதேபோல், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவருக்கும் முக்கியமான பாத்திரங்கள் என்பதுபோல் டிரெய்லரில் தெரிகிறது.

கமல்ஹாசனின் ஜோடியாக அபிராமி நடித்திருப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், நிச்சயம் ‘விக்ரம்’ போல இன்னொரு வெற்றிப் படமாகக் கமல்ஹாசனுக்கு இருக்கும் என்றும் அதேபோல், சிம்புவின் திரையுலக வாழ்க்கையிலும் இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சிம்பு குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “சென்ற தலைமுறையைப் போலவே இந்தத் தலைமுறை நடிகர்களும் வளர்ந்து வருகின்றனர்.

“சிம்பு படப்பிடிப்புக்கு வரும்போது நீ ஒரு லெஜெண்டுடன் இணைந்து நடிக்கப் போகிறாய் என அனைவரும் கூறுவர். நான் சிம்புவிடம் சென்று இதுகுறித்து பயப்படாதே என்றேன்.

“அதற்கு சிம்பு, நானும் புதுப் பையன் என நீங்களும் நினைத்துவிடாதீர்கள். முதலில் உங்கள் வேலையை ஒழுங்காகப் பாருங்கள் எனக் கூறினார்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்