அது மட்டும் நடந்தால் 17 முறை நடனமாடுவேன்: ராம் சரண்

அது மட்டும் நடந்தால் 17 முறை நடனமாடுவேன்: ராம் சரண்

1 mins read
97f6f212-6000-4605-ae71-b66f9c73c98d
ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடனமாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அண்மையில் 'கோல்டன் குளோப்' விருது வென்றிருந்தது. படம்: இணையம் -

அண்மையில் 'கோல்டன் குளோப்' விருதை வென்ற நிலையில், அடுத்ததாக ஆஸ்கார் விருதுக்குக் குறிவைத்துள்ளது 'ஆர்ஆர்ஆர்' படக்குழு.

அப்படத்தில் இடம்பெற்ற, திரு எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு 'கோல்டன் குளோப்' விருது கிடைத்தது, தெலுங்குத் திரையுலகம் மட்டுமன்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

அடுத்ததாக, ஆஸ்கார் விருதுக்கான பட்டியலிலும் அப்பாடல் இடம்பெற்றுள்ளது. விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு அப்பாடல் தேர்வுபெறுமா என்பது இம்மாதம் 24ஆம் தேதி தெரிந்துவிடும்.

இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றால், ஆஸ்கார் மேடையில் ஜூனியர் என்டிஆருடன் சேர்ந்து அப்பாடலுக்கு நடனமாடுவீர்களா என்று 'என்பிபி போட்காஸ்ட்' நேர்காணலின்போது 'ஆர்ஆர்ஆர்' நாயகன் ராம் சரணிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நிச்சயமாக! எங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் ஏன் நடனமாடக்கூடாது? மீண்டும் 17 முறை நடனமாடுவோம்," என்று அவர் பதிலளித்தார்.

அப்பாடல் 17 'டேக்' வாங்கி படமாக்கப்பட்டதால் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்தப் பாடல் படமாக்கப்பட்டதைப் பற்றிப் பேசினாலே இப்போதும் தமது கால்கள் தள்ளாடுவதாக அவர் கூறியிருந்தார். "அது அழகான சித்திரவதை! அது, இன்று எங்களை எந்த அளவு உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது, பாருங்கள்!" என்று பெருமிதத்துடன் கூறினார் ராம் சரண்.