இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் எம்எஸ்.டோனி திரைப்படத் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தமிழில் தயாரிக்கும் முதல் படம் ‘எல்ஜிஎம்’.
‘லவ் டுடே’ படத்தில் நடித்துள்ள இவானாதான் இதிலும் நாயகி.
இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என தாம் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் தனது குடும்பத்தார் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்கிறார் இவானா.
“எம்.எஸ். டோனியை சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட மிகச்சிறந்த வீரர் திரையுலகுக்கு வந்திருப்பது நல்ல விஷயம்.
“திடீரென ஒருநாள் ‘எல்ஜிஎம்’ படத்தில் நடிக்கக்கேட்டு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டோனி தயாரிக்கும் படம் என்று தெரியவந்தது. நம்பவே முடியவில்லை. என்னைவிட, குடும்பத்தார் அனைவருமே துள்ளிக் குதித்தனர். ஏனெனில் என் வீட்டில் உள்ள அனைவருமே டோனியின் தீவிர ரசிகர்கள். இப்படியோர் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்,” என உற்சாகம் குறையாமல் பேசுகிறார் இவானா.
‘எல்ஜிஎம்’ படத்தின் பூசை நிகழ்வில்தான் டோனியின் மனைவி சாக்ஷியை முதன்முதலாக சந்தித்தாராம். டோனியின் மனைவி என்கிற ‘பந்தா’ எல்லாம் அவரிடம் இல்லை என்றும் பூசையில் பங்கேற்ற அனைவரிடமும் அவர் இயல்பாகப் பேசியதாகவும் பாராட்டுகிறார் இவானா.
“ஒட்டுமொத்த நாடும் கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடும் வீரரின் மனைவி என்பதற்கான எந்தச் சுவடையும் சாக்ஷியிடம் காண முடியவில்லை. பூசைக்கு வந்திருந்த அனைவரிடமும் தாமே வலிய சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்,” என்று சொல்லும் இவானா, ‘எல்ஜிஎம்’ படம் புதுமையான கதைக்களத்துடன் உருவாகிறது என்கிறார்.
இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஏற்கெனவே ‘லவ் டுடே’ படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவருடன் இணைந்து தோன்றும் காட்சிகள் இவானாவுக்கு அமையவில்லை. அந்த மனக்குறையை ‘எல்ஜிஎம்’ போக்கியுள்ளது.
“யோகி சார் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் போதும், மொத்த படப்பிடிப்பு அரங்கும் சிரிப்பலையில் மூழ்கிவிடும். அவர் கிளம்பிச் செல்லும் வரை ஏதாவது பேசி, நடித்துக்காட்டி அனைவரையும் சிரிக்க வைப்பார். குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளைப் படமாக்கும்போது அவர் எதிர்பாராதவிதமாகப் பேசும் சொந்த வசனங்களைக் கேட்பவர்களும் அவரது உடல் மொழியைப் பார்ப்பவர்களும் நிச்சயம் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது.
“அவருடன் இணைந்து நடித்தபோது சில நடிப்புக் குறிப்புகளைத் தந்தார். நகைச்சுவைக் காட்சிகளுக்கு எத்தகைய முகபாவங்கள் கைகொடுக்கும், ஒரு கதாபாத்திரம் பேசும் நகைச்சுவை வசனத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கிச் சொன்னார்.
“அதேசமயம் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் அவரது தேர்ந்த நடிப்பு என்னை வியக்க வைத்தது. அவரது திறமையால் இப்போது உள்ளதைவிட மேலும் பல உயரங்களைத் தொடுவார்,” என்கிறார் இவானா.
புதுப் படத்தில் முன்னாள் கதாநாயகி நதியாவுடனும் இணைந்து நடிக்கிறாராம். தனது பெற்றோர் நதியாவின் தீவிர ரசிகர்கள் என்றும் சொல்கிறார்.
“நதியாவைப் பார்ப்பதற்காகவே என்னுடன் படப்பிடிப்பு அரங்குக்கு வருவார் அம்மா. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நதியாவுடன் பேசிவிடுவார். நதியாவின் நடிப்பு அனைவரையும் அசர வைத்தது. வசனங்களைக் கச்சிதமாகப் பேசி முதல் முயற்சியிலேயே தனக்கான பகுதியில் நடித்து முடித்துவிடுவார். அதைக் கண்டு பலமுறை வியந்து போயிருக்கிறேன்,” என்று சொல்லும் இவானா, தமிழ் ரசிகர்களின் மனதில் ஓர் இடம் அமைந்தால் அதுவே போதும் என்கிறார்.