ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான பான் இந்தியா தெலுங்குத் திரைப்படம் ‘பெத்தி’.
இப்படத்தில் கதாநாயகி ஜான்வி கபூரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள பட இயக்குநர் புச்சிபாபு சனா, “பெண்களைத் திரையிலும் நிஜத்திலும் எப்போதும் மதிக்கக்கூடியவன் நான்.
பெண் கதாபாத்திரங்களைப் போகப் பொருளாகக் காட்டும் நோக்கம் எங்களுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அதிருப்தியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர்களது உணர்வுகள் காயப்பட்டிருந்தால் மனதார மன்னிப்புக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், விமர்சனங்களின் அடிப்படையில், படத்தில் ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய கவர்ச்சிக் காட்சிகளை மறுபரிசீலனை செய்து மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

