‘தேவரா’ படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் கால்பதித்த ஸ்ரீதேவின் மூத்த மகள் ஜான்வி கபூர், அடுத்ததாக ராம் சரண் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்தில் நடிக்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தித் திரையுலகில் ‘தடாக்’ படத்தின்மூலம் நாயகியாக அவர் அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இந்தித் திரையுலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்தார் ஜான்வி. அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இணையத் தொடர்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் ஜான்வி.
‘களவாணி’ பட இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் பெண்களை மையமாக வைத்து இந்த இணையத்தொடர் உருவாகிறது.
இணையத்தொடர் படப்பிடிப்பு, வருகிற ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.