பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரைத்துறையில் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர், வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 46.
மனைவி பிரியங்கா, விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்த மகள் இந்திரஜா ஆகியோரை விட்டு அவர் பிரிகிறார்.
தனுஷ் நடித்த ‘மாரி’, விஷாலின் ‘இரும்புத்திரை’, விஷ்ணு விஷால் நடித்த ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற படங்களில் அறியப்பட்ட ரோபோ ஷங்கர், புதன்கிழமை (செப்டம்பர் 17) படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
படக்குழுவினர் உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பலனின்றி வியாழன் இரவு 8.30 மணியளவில் அவர் காலமானதாக நம்பப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சங்கரின் நல்லுடல், வெள்ளிக்கிழமை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கரின் மறைவு பற்றி அறிந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் தங்கள் அதிர்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி குறித்து நடிகர் கமல்ஹாசன், தமிழ்க் கவிதை ஒன்றின் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவும் தமது இரங்கலைத் தெரிவித்தார்.
இவ்வாறு பலரும் தங்கள் அஞ்சலியை இணையத்தில் செலுத்தி வருகின்றனர்.