ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி உள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் நான்கு நாளில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி தசரா பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது.
அந்த வகையில் இப்படம் வெளியான மூன்று நாள்களில் உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்திருந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நான்காம் நாள் வசூலானது ரூ.300 கோடியை எட்டியுள்ளது.
ஹோம்பாளே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படம் 30 நாடுகளில் 7 மொழிகளில் 7,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி, அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, பவன் கல்யாணின் ‘ஓஜி’, அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ போன்ற திரைப்படங்களை முந்தி சாதனை படைத்து வருகிறது ‘காந்தாரா சாப்டர் 1’.
உலகம் முழுவதும் ‘காந்தாரா’ திரைப்படத்தின் அலை வீசி வருவதால், எதிர்காலத்தில் இந்தப் படத்தின் வசூல் 1,000 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் என்கின்றன இந்திய ஊடகங்கள். இப்படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கு முன் ஆயிரம் கோடி வசூல் செய்த கன்னடப் படம் என்ற சாதனையை ‘கேஜிஎஃப் 2’ படைத்த நிலையில், அதனுடன் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.