சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள அப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு திரையரங்குகளுக்கும் வருகை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வரிசையில் அண்மையில் திருப்பூருக்கு வருகை புரிந்த அவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். “எனக்குச் சமயப் பற்று அதிகம். இதுவரை இரண்டு படங்கள் இயக்கியுள்ளேன். எல்லாப் படங்களையும் ஒரே பாணியில் எடுக்கவில்லை,” எனச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், நல்ல படம் எடுத்தால் அது மக்களின் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும் என்று நம்புகிறேன். என்னிடம் வேறு பலதரப்பட்ட கதைகளும் உள்ளன. இருப்பினும், தற்போது இந்த ஆன்மிகப் படத்தை இயக்கியதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே,” என்றார் பாலாஜி.
“நான் மக்களுக்காகவே இப்படத்தை உருவாக்கினேன். இணையத்தில் விமர்சனம் செய்பவர்களுக்காகவோ இணையவாசிகளுக்காகவோ இல்லை. இதனைப் பட வெளியீட்டிற்கு முன்னரே நான் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தேன்,” என அவர் கூறினார்.
சிலர், ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமே திரையரங்குகளில் சாமி ஆடுவதற்காக ஆள்களை அனுப்பியுள்ளதாகக் கூறிவருவதாகவும் தங்களால் கூடுதல் செலவுசெய்து அப்பணிக்காக யாரையும் பணியமர்த்த முடியாதெனவும் அவர் விளக்கினார்.
அவை வெறும் கட்டுக்கதை என்றும் பொதுமக்கள் அவற்றை நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

