மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனும் அவரின் கணவர் டேனியல் வெபரும் தேவையின்றித் துன்புறுத்தப்படுவதாக கேரள உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சன்னி லியோன், அவரின் கணவர், அவர்களின் ஊழியர் ஆகியோர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய விரும்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
சன்னி லியோன்மீது கிரிமினல் குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆயினும், வழக்கு தொடரும் என அறிவித்த நீதிமன்றம், விசாரணையை இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கேரளாவைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், தம்மிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டபின் ஒப்புக்கொண்டபடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறி, சன்னி லியோன் உள்ளிட்ட மூவர் மீதும் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கில் தாங்கள் அப்பாவிகள் எனக் கூறி, சன்னி லியோன் தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியது. தங்களால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியம் ஏதுமில்லை எனக் கூறி, 2022 ஜூலை மாதம் சன்னி லியோனுக்கு எதிரான வழக்கைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.