சென்னையில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கிகி அன்ட் கொகொ’ (Kiki and Koko) என்ற அனிமேஷன் திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. பி.நாராயணன் இயக்கியுள்ள இத்திரைப்படம், குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விழாவில் பேசிய ‘இனிகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீனா, “இரண்டு வயதில் இருந்து 14 வயது வரையுள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது என்னென்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்குமான படமாகவும் இருக்கும்,” என்றார்.
இயக்குனர் பி.நாராயணன் பேசுகையில், “நாம் ஒரு சராசரி மனிதனாக இருக்கும்போது, நடைமுறை வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை இப்படத்தில் இனிமையாகச் சொல்லியிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் குரல் கொடுத்துள்ள குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா பேசுகையில், “இந்தப் படத்தில் நான்தான் ‘கொகொ’. அந்தக் கதாபாத்திரத்திற்குச் செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதில் நடித்த பிறகு எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது,” என்று மழலை மாறாமல் பேசினார்.

