‘கிங்ஸ்டன்’ படம் வழக்கமாக பார்க்கும் படம் அல்ல. யாரும் எதிர்பார்க்காதலொரு படமாக உருவாகியுள்ளது என்று படம் குறித்து பேசியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25வது படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. ‘கிங்ஸ்டன்’ படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.
இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளது. இந்தப் படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
“தூத்துக்குடியின் பின்னணியில் கடல் மற்றும் கடலுக்கு அடியில் கதை நடக்கிறது. சபிக்கப்பட்ட கடல்புரத்தில் வசிக்கும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து, பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து 2வது பாகமும் 3வது பாகமும் உருவாக்குவதைப் பற்றி முடிவு செய்வோம்,” என்று கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.