நடிகர் அர்ஜூன், 1994ஆம் ஆண்டு இயக்கிய படம் ‘ஜெய்ஹிந்த்’. அதில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
படத்தின் கதை ஒரு பக்கம் அசத்தி இருந்தாலும், இதில் வரும் செந்தில் – கவுண்டமணி நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் கவுண்டமணியின் வசனங்கள்.
அண்மையில் ‘ஜெய்ஹிந்த்’ படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசினார் அர்ஜூன்.
“நகைச்சுவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை எளிதானது அல்ல. அதனால் நகைச்சுவை நடிகர்கள்மீது தனி மரியாதை உள்ளது,” என்றார் அவர்.
“ஜெய்ஹிந்த் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் நான் எழுதியது தான். படத்தின் இறுதிக் காட்சியில், மலைமீது ஏறி இதுதான் தீவிரவாதிகள் இருக்கும் இடம் என்று நான் சொல்வேன். அதன்பிறகு கவுண்டமணி ‘இடத்தை பார்த்தாச்சுல்ல வாங்க போகலாம்’ என்று சொல்வார். உடனே அனைவரும் சிரித்துவிட்டோம். இது வசனப் புத்தகத்தில் இல்லை. இருந்தாலும் அது நன்றாக இருந்ததால் படத்தில் வைத்துக்கொண்டோம். இப்படிப் பலமுறை நடந்துள்ளது,” என்று அர்ஜூன் கூறினார்.

