‘இட்லி கடை’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசினார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதன் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்துகொண்டார். விழாவில் தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் பாராட்டிப் பேசினர்.
“எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்றுதான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ தொடர்ச்சியாக சமையல் சார்ந்த படங்களாகச் செய்து கொண்டிருக்கிறேன். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பரோட்டா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உணவு விநியோக ஊழியர், ‘ராயன்’ படத்தில் விரைவு உணவு, ‘இட்லி கடை’ படத்தில் இட்லி சுட்டுக் கொண்டிருக்கிறேன். நான் திரைக்கதை எழுதும்போது அப்படித்தான் இருக்கிறது. எனக்கு வரும் கதைகளும் அப்படித்தான் அமைகின்றன. இதைத்தான் எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்.
“நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நம்பவேண்டும். இது இளையர்களுக்கு மிகவும் முக்கியம். தங்கள் விருப்பம் உண்மையில் நடப்பதாக அவர்கள் நினைக்க வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும். உடற்பயிற்சி செய்தால் நீங்கள் நினைப்பதை விரைவாக அடைய முடியும். கருத்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். என் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறேன். என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் போக மாட்டார்கள். அதில் எனக்குப் பெரிய கர்வமும், மகிழ்ச்சியும் இருக்கிறது.
“இட்லி கடை’ ஒரு சாதாரண படம். உங்களுடைய குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் பார்க்கும் வகையில் இருக்கும். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். அதேபோல் 9 மணிக்குத்தான் படம் தொடங்கும். ஆனால் 8 மணிக்கே படத்தின் விமர்சனம் வந்துவிடும். அதையெல்லாம் நம்பாதீர்கள். 9 மணிக்குப் படம் வெளியானால் 12:.30 மணிக்குத்தான் விமர்சனங்கள் வரும். நீங்கள் படம் பார்த்து முடிவு செய்யுங்கள் அல்லது படம் பார்த்த நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு முடிவு செய்யுங்கள் பார்க்கலாமா வேண்டாமா என்று.
“திரைப்படங்களுக்கு இது கண்டிப்பாகத் தேவை. நிறைய நல்ல படங்கள் ஓட வேண்டும். அனைத்துப் படங்களும் ஓட வேண்டும், தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகை நம்பி நிறைய தொழில்கள் உள்ளன. ஆகையால் சரியான விமர்சனங்களைப் பார்த்து படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,” என்றார் தனுஷ்.