முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றது.
இப்போது இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த விவரம் கிடைத்துள்ளது. அதாவது, எல்ஐகே படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பதே அந்தத் தகவல். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, “சில படங்களை உடனே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. இதை ஓர் ஆண்டு கழித்து இயக்கிக் கொள்ளலாம் என இருக்க முடியாது. அதன் காரணமாகவே படப்பிடிப்பை துவங்கினோம். மேலும், நெருக்கடியான சூழலில் தான் இருந்தபோது, பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய கதை பிடித்திருப்பதாகக் கூறி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

