தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் எல்லாம் முகமூடி அணிந்துள்ளனர் என்று நடிகை மாளவிகா மோகனன் காட்டமாக பேசியுள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறார்.
அண்மையில் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் இடுப்பழகைக் காட்ட தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பெரிதாக்கி பார்க்கிறார்கள் என்று அவர் அதிர்ச்சி தரும் கருத்தைத் தெரிவித்தார். தற்பொழுது மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.
வேரூன்றிய ஆணாதிக்கம்
இம்முறை பெண்ணியம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட மாளவிகா மோகனன், சினிமா துறையில் ஆணாதிக்கம் வேரூன்றியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தங்களை பெண்ணியவாதிகளாக முன்னிறுத்தி படங்களில் நடிக்கும் நடிகர்களையும் அவர் விமர்சித்து அவர்கள் எப்படி முகமூடி அணிந்துள்ளனர் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
எப்போது முடிவு?
அண்மையில் ஒரு சஞ்சிகைக்கு பேட்டி அளித்த மாளவிகா, பெண்ணியம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பேட்டியில் மாளவிகா மோகனன் கூறுகையில், “சினிமா துறையில் இந்த சமத்துவமின்மை (ஆணாதிக்கம்) எப்போதும் முடியாது என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.
சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள்
நடிகர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல நடிகர்களிடம் இதை நான் பார்த்துள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் எப்படி நடிக்க வேண்டும், சிக்கல்கள் வரும்போது அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி பேச வேண்டும், எப்படி முகமூடி அணிந்துகொண்டு இருக்கவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்றார்.
யாரும் இல்லாதபோது..
மாளவிகா மேலும் கூறுகையில், “பெண்களைச் சமமாகப் பார்ப்பவர், மிகவும் முற்போக்கு சிந்தனை உள்ளவர், பெண்ணியவாதிபோல தோன்றுவதற்கு என்னென்ன வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதேபோல் அவர்கள், யாரும் இல்லாதபோது எப்படி பெண் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்,” என்று கூறினார். ஆனால், பெண்ணியவாதிகள் போல நடிக்கும் நடிகர்களின் பெயரை மாளவிகா மோகனன் இறுதிவரைச் சொல்லவில்லை.
மாளவிகாவின் நடிப்பில் வரவிருக்கும் படங்கள்
மாளவிகா மோகனனின் கருத்துகள் தற்பொழுது இந்திய ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தமிழ்ப் படமான ‘தங்கலான்’ மூலம் ரசிகர்களை ஈர்த்தார் மாளவிகா மோகனன்.
தற்போது இந்திப் படமான ‘யுத்ரா’வில் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘ஹிருதயபூர்வம்’ என்ற படத்திலும் பான் இந்தியா நடிகரான பிரபாஸுடன் தெலுங்குப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
சஞ்சய் தத் சிறப்புத் தோற்றம்
‘தி ராஜா சாப்’ படத்தில் மாளவிகாவுடன் நித்யா அகர்வால், ரித்திகா குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மேலும், மாளவிகா தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படத்திலும் நடிக்கிறார்.