நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘யோகிடா’ திரைப்படம், பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.
கௌதம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சாய் தன்ஷிகா, தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டார்.
ஒரு பெண்ணை மானபங்கம் செய்துவிட்டால் அவரைத் தொடர்ந்து செயல்படவிடாமல் தடுத்துவிடலாம் எனச் சிலர் நினைப்பதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையைக் கடந்தபிறகும் பெண்களுக்கென ஒரு வாழ்க்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘யோகிடா’ படத்தில் ‘கபாலி’ படத்தோற்றத்துடன் நடிக்கிறாராம். ‘கபாலி’யில் இவர் ஏற்று நடித்த யோகி என்ற கதாபாத்திரமும் அதற்கான தோற்றமும் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.
“மலேசியாவில் அந்தத் தோற்றத்தில் பலரைக் காண முடியும். அதுவும் ‘கபாலி’ படத்துக்குப் பிறகு யோகியைப் போல் பலர் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டது எனக்கு வியப்பு அளித்தது,” என்றார் தன்ஷிகா.
‘பேராண்மை’ படத்தில் நடித்தபோது பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சி பெற்றதாகவும் அது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க தனக்கு உதவியதாகவும் தெரிவித்தார் தன்ஷிகா.
இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

