கதாநாயகனாகத் தன்னை வலுவாக நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் நடிகர் சூரி.
அவர் நடித்துள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்படத்தை ரவிக்குமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மிக வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் கவரப்பட்ட சூரி, கதை கேட்ட அடுத்த நிமிடமே நடிக்க சம்மதித்துவிட்டதாகத் தகவல்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு அப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
அச்சமயம் சென்னை மாநகரம் உருக்குலைந்து போனது. மிகப்பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டன. அப்போது மக்கள் எதிர்கொண்ட வலிகளைப் பதிவுசெய்யும் படமாக இது இருக்கும் என்று இயக்குநர் தரப்பு கூறுகிறது.
இதில் சூரியுடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, அதன் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுவிட்டதாம்.
இந்த உற்சாகத்தில் பெரும் பொருள்செலவில் படத்தை உருவாக்க முன்வந்துள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.
தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதன் இறுதிகட்டப் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தின் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.


