மோகன்லால் தான் நடித்திருக்கும் ‘தொடரும்’ படத்தின் வெற்றியை தன் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
நடிகர் மோகன்லாலுக்கு கடந்த ஆண்டு வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’, அவரே இயக்கி, நடித்த ‘பரோஸ்’ இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ‘எம்புரான்’, ‘தொடரும்’ என இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்து நூறு கோடி ரூபாய் வசூலையும் கடந்துள்ளன.
‘எம்புரான்’ படம் சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும்கூட ரூ.200 கோடி வசூலைக் கடந்தது. தற்போது ‘தொடரும்’ படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று குறைந்த நாளிலேயே ரூ.100 கோடி வசூலைத் தாண்டி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என மோகன்லாலின் அனைத்திந்திய கேரள ரசிகர் மன்றம் முடிவு செய்தது.
மோகன்லால் தற்போது நடித்து வரும் ‘ஹிருதயபூர்வம்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. படப்பிடிப்புக்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ‘தொடரும்’ வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதில் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித், இயக்குநர் தருண் மூர்த்தி இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட மோகன்லால், கேக் வெட்டி சிலருக்கு ஊட்டியும் விட்டார். படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி ஆசையாக கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மோகன்லால்.

