‘கூலி’ படத்தின் வசூல் ரூ.500 கோடி என்று அதன் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாற்றங்கள் என்பன நம்மிடம் இருந்துதான் பிறக்கும் என்றும் சிந்தித்துச் செயல்பட்டால் சிக்கல் இல்லை என்றும் கூறினார்.
“’கூலி’ படத்தை முடித்த பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை. காரணம், அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன்.
“எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கவில்லை. ‘கூலி’ படம் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவர்களுடைய விமர்சனங்களை ஏற்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை,” என்றார் லோகேஷ்.
அந்த வகையில், தானும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அடுத்து வரும் தன்னுடைய படங்களில் ரசிகர்கள் வேண்டாம் எனச் சுட்டிக்காட்டியவற்றை தவிர்க்க முயற்சி செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
விமர்சனங்களைக் கடந்து திரு ரஜினிக்காக, இப்படிப்பட்ட ஒரு படத்தை மக்கள் திரையரங்கு சென்று பார்த்ததாகக் குறிப்பிட்ட லோகேஷ், அதற்காக நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
“கூலி’ படம் ரூ.500 கோடி வசூல் கண்டதாகத் தயாரிப்பாளர் சொன்னார். இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய ஆதரவுதான்,” என்றார் லோகேஷ்.

