நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் தம் மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார்.
சண்டைப் பயிற்சியாளர் பாண்டியனிடம் முறைப்படி சண்டைப் பயிற்சிகளைக் கற்றுவந்த தம் மகனுக்குப் பதினெட்டு வயதானதால், விதிமுறைப்படி சங்க உறுப்பினர் அட்டை வாங்கித் தந்ததாக அவர் கூறினார்.
திரையுலகில் நடிகராவதற்கு முன்னர் சண்டை போடும் கலைஞராகத் தம் பயணத்தைத் தொடங்கிய முத்துக்காளை, ஸ்டண்ட் யூனியனைத் தம் தாய்வீடாகவும் நடிகர் சங்கத்தைப் புகுந்த வீடாகவும் கருதுவதாகத் தெரிவித்தார்.
சினிமா வாய்ப்புகளைக் கணிப்பது கடினம் என்பதால், திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதேவேளையில் படிப்புதான் முதன்மையானது என்றும் தம் மகனுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ளதால் நடிகர்கள் இனி ஆபத்தான சண்டைக் காட்சிகளில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
