‘பாபா’ படத்தின் தோல்விக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. என் திரை வாழ்க்கை அடுத்தகட்ட முன்னேற்றம் இன்றி முற்றுபெற்றுவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார் மனிஷா கொய்ராலா.
‘பாம்பே’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘ஆளவந்தான்’, ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா.
இவர், கடைசியாக தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்சில் வெளியான ‘ஹீராமண்டி’ இணையத் தொடரிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், ‘பாபா’ படத்தின் தோல்வி ஒரு பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
“2002ஆம் ஆண்டு ‘பாபா’ படத்தில் நடித்தேன். அப்படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்பாராதவிதமாக படம் தோல்வியைச் சந்தித்தது.
“நமது தென்னிந்தியப் பயணம் இத்தோடு முடிந்துவிட்டது என நினைத்தேன். நான் நினைத்தபடிதான் நடந்தது.
“பல நல்ல படங்களில் நடித்து வந்த எனக்கு ‘பாபா’ தோல்வி சாட்டை அடியாக அமைந்துவிட்டது,” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், மனிஷா கொய்ராலா ரஜினி மீது எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை.
‘பாபா’ திரைப்படம் மீண்டும் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றதைக் குறிப்பிட்டு, “விசித்திரமாக, 20 ஆண்டுகளுக்குக்குப் பின்னர் மீண்டும் ‘பாபா’ வெளியானபோது, படம் வெற்றிபெற்றது. இது இதுவரை கேள்விப்படாத ஒன்று.
“ரஜினி ஒருபோதும் தோல்வியடைய மாட்டார். அனைவரும் அவருடன் இணைந்து வேலை செய்ய விரும்பும் ஒரு நல்ல மனிதர்,” என்றும் மனிஷா பாராட்டியுள்ளார்.
பாபா திரைப்படத்தின் கதை, திரைக்கதையை ரஜினியே எழுதித் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்தின் தோல்வி ஒரு நடிகரின், குறிப்பாக நடிகைகளின் எதிர்கால வாழ்க்கையை எந்த அளவிற்கு புரட்டிப் போடும் என்பதற்கு மனிஷா சிறந்த உதாரணம் என கோலிவுட் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
2012ஆம் ஆண்டு மனிஷாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது வாழ்க்கையில் பெரிய சவாலை எதிர்நோக்கிய அவர், அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
தற்போது புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
புற்றுநோய் பாதித்த சமயத்தில் தான் சந்தித்த சவால்களை ஒரு வாழ்க்கை புத்தகமாகவும் எழுதி வழிகாட்டியுள்ளார்.