இயக்குநர் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து சமூக ஊடகங்களில், ‘அவருக்கு என்ன ஆயிற்று’ என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த நிலையில், அடுத்த படத்துக்கு அவர் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக, தான் இயக்கிய ‘எல்ஐகே’ படம் ஜென்ஸி ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று உறுதியான நம்பிக்கையில் இருந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அப்படம் ஒருதரப்பு ரசிகர்களைக் கவர்ந்தாலும் மற்றொரு தரப்பை ஈர்க்கத் தவறியதாகக் கூறுகிறார்கள் விமர்சகர்கள்.
விமர்சன, வசூல் ரீதியிலான இத்தோல்வி, விக்னேஷை சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது. எனினும் சில நாள்கள் இதை நினைத்து புலம்பிக்கொண்டிருந்த அவர், சோகத்துக்கு மத்தியிலும் புதுக் கதை ஒன்றைத் தயார் செய்துவிட்டதாகத் தகவல்.
விக்னேஷ் இயக்கத்தில் வெளியாகி, பெரிய வெற்றியைப் பெற்ற ‘நானும் ரௌடிதான்’ படத்தைப் போலவே இளையர்களைக் கவரும் வகையில் அந்தக் கதை இருக்குமாம்.
முழுமையாக எழுதி முடித்துவிட்டாலும் அக்கதையின் நாயகன், நாயகி யார் என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிகிறது.
நயன்தாரா நடிக்கக்கூடும் என்று சிலர் கூறினாலும், கதைக்கேற்ற நாயகியை விக்னேஷ் ஒப்பந்தம் செய்வார் என அவரது தரப்பு கூறுகிறது.

