டோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநர் அனில் ரவிபுடி உருவாக்கும் ‘மெகா 157’ திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நயன்தாரா சிரஞ்சீவிக்காக தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் அனில் ரவிபுடி. அவர் இயக்கத்தில் இறுதியாக பொங்கலுக்கு வெளிவந்த ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் ‘மெகா 157’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படக்குழு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை அனில் ரவிபுடி ஒரு வித்தியாசமான காணொளி மூலம் வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் நயன்தாரா தனது குழுவினருடன் தெலுங்கில் பேசுவதும் காரில் சிரஞ்சீவியின் பாடல்களைக் கேட்பதும் கதையைப் படிப்பதும் சிரஞ்சீவியின் வசனத்தைப் பேசுவதுமாகக் காட்டப்பட்டுள்ளது. இறுதியில் அனில் ரவிபுடி திரையில் தோன்றி நயன்தாரா படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்துகிறார்.
சிரஞ்சீவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்னதாக ‘சைரா நரசிம்ம ரெட்டி’ (2019), ‘காட்ஃபாதர்’ (2022) ஆகிய படங்களில் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிற்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பட விளம்பரத்தின் இறுதியில் சிரஞ்சீவியின் பிரபல வசனம் மூலம் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் நடிக்க ரூ.18 கோடி சம்பளமாக கேட்டிருந்த நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் கேட்டதைவிட 66 விழுக்காடு குறைவான தொகையை வழங்க உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரஞ்சீவிக்காக அவர் சம்பளத்தை குறைக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.