நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிக்கான காணொளிப் பதிவுகளை ஆவணப்படமாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து 2024ல் ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியிட்டது.
இதில் நடிகர் தனுஷ் நிறுவனமான ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
தனது அனுமதியைப் பெறாமல் நானும் ரவுடி தான் படக்காட்சிகளைப் பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், அதே ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கக் கோரி, ‘சந்திரமுகி’ படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோவும் நெட்பிளிக்ஸும் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தனுஷின் இழப்பீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு வந்துள்ளதால் நயன்தாரா தரப்புக்கு தலைவலி அதிகமாகியுள்ளது.