நடிகை நயன்தாரா தற்போது பல இந்திய மொழிகளில் வெளியாகும் ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து நடித்து வருகிறார்.
தென்னிந்தியத் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நயன்தாரா.
பெண்களை முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள இவர், தற்போது இந்தித் திரையுலகிலும் தடம் பதித்து வருகிறார்.
அண்மையில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் இவருக்கு இந்தியில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
முன்னணி இந்தி நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த அப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கினார். ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து, இந்திய அளவில் மாபெரும் வெற்றிபெற்றது.
அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நயன்தாராவுக்கு இந்தித் திரையுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
எனவே, அவர் இனிமேல் பல இந்திய மொழிகளிலும் வெளியாகும் ‘பான் இந்தியா’ படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் ‘மண்ணாங்கட்டி’ என்ற தமிழ்ப் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அவர் முற்றிலும் ‘பான் இந்தியா’ திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். இதனால், அவர் இனி நேரடித் தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடக்கூடும் என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

