நடிகைகள் சம்யுக்தா, ஷெரின் ஆகிய இருவரும் தாங்கள் நடித்த படத்தின் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதுப்படம் ‘தில் ராஜா’. விஜய் சத்யா, வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா, பேராசிரியர் ஞானசம்பந்தம், லொள்ளு சபா மனோகர், மூக்குத்தி முருகன் என ஏராளமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ஆனால் படத்தின் நாயகிகளான சம்யுக்தா, ஷெரின் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இயக்குநர் வெங்கடேஷ் பேசுகையில், இரு நாயகிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தபோது சாமர்த்தியமாக மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“இத்தனைக்கும் இருவருக்குமே மிக முக்கியமான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. இருவரும் நன்றாக நடித்துள்ளனர். நிச்சயமாக இந்தப்படம் அனைவருக்கும் நல்ல பெயரை வாங்கித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
“எனது இயக்கத்தில் நடித்த பல நாயகர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாமே என்று சிலர் ஆலோசனை வழங்கினர். நானும் ஒரு நாயகனை அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. இதுதான் சினிமா உலகம்,” என்றார் இயக்குநர் வெங்கடேஷ்.

