அதிக வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் நடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான அவர், தற்போது பாலிவுட் படங்களில் அதிகக் கவனம் செலுத்துகிறார்.
இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய டாப்சி, “அண்மைகாலமாக அதிக வன்முறை, மனத்தை உலுக்கும் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகின்றன.
“அத்தகைய படங்களை விரும்பும் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், அதுபோன்ற கதைகளில் நடிக்கத் தனக்கு விருப்பமில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது, ‘நான் ஓய்வுபெறும் காலம் வந்துவிட்டதா?’’ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
“உண்மைதான். அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்குப் பதில் திரையுலக நடிப்பில் இருந்தே முற்றிலும் ஓய்வுபெற்றுவிடலாம்,” என்று அவர் மனந்திறந்து பேசியுள்ளார்.


