சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து, மக்கள் மனத்தில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பெரும் வெற்றிப் படமான ‘பிரேமம்’ மூலம் அறிமுகமானார்.
அப்படத்தைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் தனுஷின் ‘கொடி’ மூலம் அறிமுகமானார். இப்போது துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அனுபமா பகிர்ந்துள்ள நேர்காணலில், “இளவயதிலிருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என் பள்ளியில், படிப்பில் முதலிடம் பிடிப்பவர்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். காரணம், நன்கு படிப்பவர்களால்தான் நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து சொல்ல முடியும் என்ற கருத்து நிலவியது.
“அது என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. ஆனால், நான் பள்ளியில் முதல்நிலை மாணவர் கிடையாது. இதனால் நடிக்க முடியாது என்ற பயத்தால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். பிறகு நான் வளர்ந்த பிறகுதான் படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.