“இன்னொரு புத்தம் புதிய முழு பிரபஞ்சமே உருவானாலும் இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அவர் ஒருவர்தான். அவர் ரஜினி மட்டும்தான்,” என்று ரித்திகா சிங் நெகிழ்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த இளம் நடிகர்கள், நேர்காணல்களிலும் மேடைகளிலும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்துப் பேசி வந்தனர்.
அவ்வகையில் படத்தில் ‘ஏ.எஸ்.பி’ ரூபா கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா சிங், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “ரஜினி சாருடன் இருக்கும்போது, ஒருவர் அறியும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால், தனித்துவமாக ஜொலிப்பீர்கள். வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும் அப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்ற முடிவையே தேர்ந்தெடுப்பீர்கள்.
“ரஜினி சார், கண்களின் மூலமாகவும் புன்னகையாலும் பகிரும் அன்பானது மிகுந்த சக்தி வாய்ந்தது. அது உள்ளுக்குள் இருக்கும் காயங்களை ஆற்றும். ஒரு பார்வையிலேயே அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வை, நான் இதற்கு முன் அனுபவித்தது கிடையாது.
“புகைப்படக் கருவி இயங்காதபோது அவர் மிகவும் சாதாரணமாக இருக்கிறார். ஆனால், ‘ஆக்ஷன்’ என்று சொன்னவுடன் முற்றிலும் புதியவராக மாறிவிடுகிறார். நம்ப முடியாத மனிதராக உருவெடுக்கிறார். அந்த நம்ப முடியாத மனிதரைத்தான் நாம் நேசிக்கிறோம்.
“அவரைப் போல இன்னொரு ரஜினி இனி பிறக்கப்போவதில்லை. இன்னொரு புத்தம் புதிய முழு பிரபஞ்சமே உருவானாலும் இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அவர் ஒருவர்தான். அவர் மட்டும்தான்,” என்று நெகிழ்ந்துள்ளார் ரித்திகா சிங்.