சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா இணைந்து நடிக்கும் படம் ‘நூறு சாமி’.
பெற்ற தாயை தெய்வம், கடவுள், சாமி என்று சொல்லி ஆராதித்துக் கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட அம்மாவை உயிராகவும் பாருங்கள் என்று சொல்லித்தரும் படமாக ‘நூறு சாமி’ உருவாகி இருக்கிறது என்கிறார் இயக்குநர் சசி.
ஒரு மகன் தன் அம்மாவை சாமியாக நினைத்தால் அது ‘பிச்சைக்காரன்’. ஒரு மகன் தன் அம்மாவை உயிருள்ள மனுஷியாக நினைத்தால் அது ‘நூறு சாமி’ என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படத்தின் கதையை விஜய் ஆண்டனியிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். தன்னைவிட சுவாசிகா கதாபாத்திரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், நல்ல கதை என்பதால் நிச்சயம் நடிப்பதாகக் கூறினார். “சுவாசிகாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டார். பாத்திரத்துடன் ஒன்றிப்போய் அற்புதமாக நடித்துள்ளார் சுவாசிகா.
“ஒரு பந்தத்தை உணரவைக்கும் வகையில் அவரது நடிப்பு இருக்கும். பேரன்போடும் பெரும் துணிவோடும் ஓர் அம்மாவைத் திரையில் கட்டமைக்க முயற்சி செய்திருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் சசி.

