பணம் கொடுத்து தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் ஒருதரப்பினர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நடிகை பிரியங்கா மோகன் புகார் எழுப்பியுள்ளார்.
தற்போது தெலுங்கில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக, ‘ஓ ஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார் இவர். செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு நடிக்கத் தெரியவில்லை, நடனம் வரவில்லை என்று தன்னைப் பிடிக்காதவர்கள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து கிண்டல் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“என்னைப் பிடிக்காத சிலர்தான் இவ்வாறு காசு கொடுத்து சிலரைத் தூண்டிவிடுகிறார்கள். எனது நடிப்பைக் கிண்டல் செய்து ‘மீம்ஸ்’கள் வெளியிடுவது யார் எனத் தெரியவில்லை.
“ஆனால், இதுகுறித்தெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் மனமுடைந்தும் போவதில்லை. என்னை நானே பல வகையிலும் திடப்படுத்திக் கொண்டு வருகிறேன். அதனால் யார் என்ன செய்தாலும் எனக்கென்ன?” என்று கேள்வி எழுப்புகிறார் பிரியங்கா மோகன்.